Monday, January 31, 2011

ஒரு கழுதை கொடுத்த உதை


ஒரு கழுதை கொடுத்த உதை
லிபியா
1995
எண்ணை சுத்தீகரிப்பு  ஆலை
எனக்கு பொறியியல் வேலை
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பண்ணை (farm).வாரம் ஒருமுறை அங்கே போய் பால் வாங்கி வருவது என் வாடிக்கை.
அந்தப் பண்ணையின் உரிமையாளர் இப்ரஹீம்.
நல்ல தடிமனான வஞ்சனை இல்லாத உடல்.
சிரித்தால் வாய் முழுவதும் தங்கம் ஜொலிக்கும் பல் வரிசை.
உள்ளே நுழைந்ததும் ஓடிவந்து வரவேற்கும் கடைக்குட்டிப் பெண்.
புஸு புஸு என்று கிள்ளத் தோன்றும் கன்னங்கள்.
ஐந்து அல்லது ஆறு வயதுதான்.
ஓடி வந்து என்னிடமிருந்து பால் நிரப்பும் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேனை பிடுங்கிக்கொண்டு என் கையிலிருந்து ஒரு சாக்லேட் துண்டையும் ஆவலுடன் பறித்துக்கொண்டு துள்ளி ஓடும் ஒய்யாரம் அந்த குழந்தைக்கே உரிய, என்னைக் கவர்ந்த வரப்ரசாதம்.
நான் காரைத் திருப்பிப் பார்க் செய்து விட்டு இறங்கிப் போவதற்குள் இப்ரஹீமின்  மற்றக் குழந்தைகள் என்னை மொய்த்துக்கொள்ளும்.
வரிசையாக ஒண்ணரை ஒண்ணரை வயது வித்தியாசத்தில் ஒரே அச்சில் வார்த்துச் சிரிக்கும் பொம்மைகள்.
ஒரு சாக்லேட்  போதும் அவை மலர.
இப்ரஹீம் பண்ணை நடுவிலிருந்து குரல் கொடுக்க நான் அவரை நோக்கி  நடக்க ஆரம்பித்தேன்.
அவரிடம் போய் கை குலுக்கி சம்பிரதாய வினவல்களை அராபிய மொழியில் எனக்குத் தெரிந்த அளவில் பரிமாறிக்கொண்டபின் அங்கே கட்டி இருந்த அவருடைய கழுதை என்னைப் பார்த்து அன்புடன் கனைத்ததில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது....ஏதோ அருமை நண்பனை பார்த்த மாதிரி.
இப்ரஹீம் சொன்னார்:
''
இந்தக் கழுதை என் பிரியமான பிராணி.
என் மனைவியை விட என் கழுதை சில விஷயங்களில் மேன்மையானது''எனக்கு ரொம்ப வியப்பாகி விட்டது. இப்படியும் ஒரு மனிதனா?அதுவும் வீட்டில் மனைவி இருக்கும்போதே இப்படி உரத்தகுரலில் சொல்ல என்ன தைரியம்?
''
என்ன இப்ரஹீம் ... ஏன் இப்படி சொல்கிறாய்... உன் மனைவி ரொம்ப நல்ல மாதிரியாச்சே.''
''
அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடப்பது வேறு.
நான் காலை ஐந்து மணியிலிருந்து பண்ணை வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்....
பாருங்கள், நான் ஒரு நிமிடம் ஓய்வாக நின்றால் உடனே குரல் கொடுப்பாள் அடுத்த வேலை தர.
என் கழுதை அப்படி இல்லை.
நான் கட்டிய இடத்தில் அமைதியாக மேய்ந்து கொண்டு இருக்கும். நான் முதுகில் ஏற்றும் சுமையை சலிக்காது என்னுடன்  எடுத்து வரும்.
எனக்கு என் கழுதை தொந்திரவே தந்ததில்லை.
எவ்வளவு நல்ல பிராணி இது.
கடவுள் இந்தக் கழுதையை ரட்சிக்கட்டும்.''என்று கூற , நான் அந்த அதிசயக் கழுதையை நெருங்கிப் பார்க்க அடி எடுத்து வைத்தேன்.
உடனே அந்தக் கழுதை தன் உடலைத் திருப்பி அதன் பின்னங்கால்கள் என் பக்கம் வரும்படி நின்றது.
சரி நாம் வேறு பக்கம் பார்க்கலாம் என்று நான் அடியெடுத்து வைக்க அந்தக் கழுதையும் மறுபடி அதன் பின்கால்கள் என்னை வரவேற்கும் நிலையில் திரும்பி நின்றது.
நான் புரிந்து கொண்டேன்.
கழுதைகள் கூட புத்திசாலிகள் தான்.
மனிதனை நெருங்க விடாமல் உதைக்க அவற்றுக்கு இயற்கை கற்றுக்கொடுத்திருக்கிறது.
ரொம்பவும் நெருங்க முற்பட்டால் நம் முன்பற்களை இழக்க நேரிடும்.
இந்த defence mechanism ( தற்காப்புத் திறன் ) எல்லாக் கழுதைகளுக்கும் உண்டு.
அவைகளுக்கு தெரியும்....இந்த மனிதப் பிராணிகளை மதித்துப் பக்கத்தில் வர விட்டால் நம் மேல் ஏறி உட்கார்ந்து நம்மையே அதிகாரம் செய்வார்கள் என்று.
அந்தக் கழுதையின் உரிமையை மதித்து நான் சிறிது நகர்ந்தேன்.
கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தபோது ஒரு வேடிக்கையான விஷயம் தென்பட்டது . அந்தக் கழுதை கட்டியிருந்த கயிறு சுமார் இருபது  அல்லது  இருபத்து ஐந்து அடி நீளம் இருக்கும்.பக்கத்துப் பண்ணைக்குப் பரவாமல் மேயும் அளவுக்குக் கொடுக்கப் பட்ட நீளம்.
நாள் பூரா மேய்ந்தாலும் போதுமான புல்லும் செடிகளும் வளர்ந்திருந்த செழிப்பான பூமி .
அந்தக் கழுதைக்கு குறைபட ஏதுமில்லை.
ஆனால் நான் பார்த்த ஒரு விஷயம் என் மனதில் கேள்விக்குறியாய் தொடர்ந்தது.
அந்தக் கழுதை, கட்டியிருந்த கம்பத்தின் அருகாமையிலேயே மேய்ந்து கொண்டிருந்தது.
கொஞ்சம் பெரிய வட்டத்தில் நிறைய பசுமை  இருந்தும் சிறிய வட்டத்திலேயே அடங்கி இருந்தது....
ஏன் என்று பார்த்தால் அது கயிற்றை ஒரே முகமாகச் சுற்றிச்  சுற்றி அந்தக் கயிற்றின் நீளம் முழுவதும் அந்தக் கம்பத்தில் ஏறி, மிகக் குறுகிய அளவே எஞ்சி இருந்தது.
அந்தக் கழுதை கொஞ்சம் நிதானித்துப் பார்த்திருந்தால் அந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு நல்ல பசுமையான புல்லை மேய வாய்ப்புக்  கிடைத்திருக்கும்.
ஆனால் குறுகிய வட்டத்திலேயே ஒரே பக்கமாக சுற்றி வந்து தன்னை வளைத்துப் போட்டுக்கொண்ட அறியாமையை உணரவில்லை.
உணர்ந்தால் அது மிக எளிதாய் மற்ற பக்கத்துக்கு திரும்பிச் சுற்றி வந்து தன்னை இந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் அந்தக் கழுதைக்குத் தெரிய வேண்டும் என்று நான் நினைப்பதே ஒரு மடமை தான்.
அதற்கு அதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை.
மனிதனைப் போல நினைக்க வேண்டிய மன உளைச்சலும் அதற்கில்லை.
திடீர் என்று எனக்கு ஒரு உதை!
உடலில் இல்லை
மனதில்.
'
நானும் அந்தக் கழுதை போல்தானே?' என்ற நினைப்புத்தான் அந்த உதை.
கடந்த கால அனுபவங்களினால் ஏற்படுத்திக்கொண்ட  மனத்தடைகள், என் சுற்றம், என் குடும்பம், என் கலாச்சாரம், என் தொழில் என்று என்னைச் சுற்றி வட்டங்களை நிறுவிக்கொண்டு அந்தக் குறுகிய இடத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் நான் இந்தக் கழுதையை விட என்ன உயர்த்தி?அந்தக் கழுதை அந்தக் கணத்தில் ஒரு நல்ல பாடம் கற்பித்தது.
இதுவரை அதை என்னால் மறக்க முடியவில்லை.
அந்தப் பரிமாணத்திலிருந்து என்னை மீட்க வந்ததுபோல் இப்ரஹீமின்  மனைவி பால் நிரப்பிய குடுவையுடன் வந்தாள்.
நாங்கள் கழுதையுடன் உரையாடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்:
''
இந்த மனிதனின் மடமையைப் பாருங்கள் ...
இந்தக் கழுதை இவருக்கு சோறு போடுமா?என்னை விட இந்தக் கழுதை எப்படி மேலாகும்?நான் தினமும் படைத்த உணவு எவ்வளவு சுவையானது என்று இப்ரஹீமின் உடலே சொல்லும்.''என்று கூறியபடி அவரது தொப்பையைத் தொட்டுக்காட்டி கேலி செய்தாள்.
இதற்கு ஒன்றும் சளைக்கவில்லை இப்ரஹீம்.
''
நீயும் எனக்கு நிகர் தான்'' என்று சிரித்தான்.
அவளுடைய சுற்றளவை இப்ரஹீம் எட்ட பல நாட்கள் ஆகும் என்பது நிதர்சமான உண்மை.
நான் சிரித்துக்கொண்டே பாலுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு காரில் ஏறினேன்.
அந்தக் கழுதை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்னுடன் ஐக்கியமாகி விட்டது.

No comments:

Post a Comment