Thursday, September 1, 2011

லிப்டில் ஒரு அதிர்ச்சி


லிப்டில் ஒரு அதிர்ச்சி

சில  நேரங்களில் அவசிய மற்ற வார்த்தைகளை அள்ளி வழங்குகிறார்கள்  சிலபேர்மற்றவர்களை அது எப்படி பாதிக்கும் என்று சிறிதும் சிந்திக்காமல்.
ஒருமுறை எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் லிப்ட்க்காக  காத்திருக்கும்போது ஒருவர் வந்தார்.
அவர்: '' ஹலோ, நீங்கள் புதியதாய் இங்கே வந்திருக்கிறீர்கள் இல்லையா?''
நான்: ''ஆமாம்''
அவர் : ''நீங்கள் ஜாம்பியாவில் வேலை செய்துவிட்டு இப்போது இங்கே வந்து செட்டில் ஆகி இருக்கிறீர்கள் என்பது உண்மையா?''
நான் : '' ஆமாம்''
என்னைப்பற்றி இவ்வளவு விரைவில் இவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறார் …. இவர் யாராக இருக்கும்?
அதற்குள் லிப்ட் வர இருவரும் ஏறிக் கொண்டோம்.
அவர் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தார்.
''
எவ்வளவு வருடம் ஜாம்பியாவில் இருந்தீர்கள்?''
நான்: ''ஐந்து வருடம்''
அவர் : ''ஓஹோ, பரவாயில்லை.
எனக்குத் தெரிந்த  நண்பர் ஒருவர் ஜாம்பியாவில் டாக்டராக இருந்தார்.
நான்: ''அப்படியா?''
அவர் : '' ஆமாம். ஆனால் ஒரு வருஷத்தில் அங்கேயே காலமாகி விட்டார்.''
நான்: '' அடப்பாவமே''
இதற்குமேல் இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.... எனினும் சொன்னேன்ன் :
''
சில நேரங்களில் டாக்டர்களும் இறந்துபோக நேரிடுகிறது...
இதுபோல் நடப்பது நமக்கு அப்பாற்பட்டது, என்ன செய்வது'' என்றேன்
அதற்குள் லிப்ட் இறங்கிவிட எங்கள் இனிய உரையாடல் முடிவடைந்தது.
நான் ஏதோ ஞானி என்பது போல என்னைப் பார்த்துவிட்டு மறைந்தார் அந்த நண்பர்.
இன்னும் கதை முடியவில்லை .....

இந்த மறக்கமுடியாத உரையாடலைப் பற்றி எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சகவாசியாய் இருக்கும் இன்னொரு நண்பரிடம் கூறியபோது அவர் சொன்னது எனக்குவியப்பளித்தது.
''
, அவர் ஒல்லியா, உயரமா, வழுக்கையா, சார்லி சாப்ளின் மாதிரி ஒட்டு மீசையுடன் இருந்தாரா?''
நான்: '' ஆமாம், எப்படி இவ்வளவு சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?''
அவர்: '' அவர்  ஒரு லாயர், ...வழக்கறிஞர்.... இப்போதெல்லாம் வழக்குரைஞர் என்று சொல்லவேண்டும். அவர் எப்பவும் இப்படித்தான்.''
எனக்கு ஆச்சரியம்.
நான்: '' எப்பவும் என்றால்?''
அவர்: ''அதாவது ... யாரைப்  பார்த்தாலும் ஏதாவது பேச ஆரம்பிப்பார் .
எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது.
சமீபத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தபோது அவர் 'ஹலோ' சொல்லிவிட்டுக் கேட்டார்:'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'
நான் சொன்னேன்: 'நான் மரின் என்ஜினீயர், கப்பல் பராமரிக்கும் வேலை''
அவர் பதிலளித்தார்:' , பரவாயில்லையே,
எனக்கு ஒரு மரின் என்ஜினீயரைத்  தெரியும்
அவர் மெக்சிகோ கப்பலில் வேலை செய்தார்'
நான்: 'அப்படியா?'
அவர்:'ஆமாம் ... ஆனால் அந்தக் கப்பலிலேயே இறந்து விட்டார், போன வருஷம்'
எனக்கு வியப்பாகிவிட்டது.
என்னடா, இந்த மனுஷன் இப்படி இங்கிதம் இல்லாமல் பேசுகிறாரே என்று. இந்த வருஷம் தான் நான் படிப்பு முடிந்து கப்பலில் பணிபுரியச் செல்கிறேன். இது என்ன அபசகுனம் மாதிரி.''
என்று சொல்லி முடித்தார் அந்த சகவாசி.
இப்போது எனக்கு அந்த வழக்குரைஞர் நண்பரைப் பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.
எங்கள் அபார்ட்மென்டில் உயரமாக, ஒல்லியாக, வழுக்கையாக, ஒட்டு மீசையுடன் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதிர்ந்துவிடாதீர்கள். அவர் இறந்தவர்களைப்பற்றிய ஸ்பெஷலிஸ்ட்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சுவாரசியங்கள்.
கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்!


தாடி


தாடி

சில பேர் தியானம் (meditation) கத்துக்கணும்னு யாராவது தாடியோட இருக்கறவங்க பின்னாலேயே போவாங்க.
நமக்கெல்லாம் தாடி மேலே ஒரு மரியாதை.
தாடி வெச்சவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று நம்புகிற வெகுளித்தனம்.
அரபு நாடுகளில் தாடி வெச்சவங்களை கொஞ்சம் உஷாராக கவனிக்கறாங்க.
எந்த தாடியில் எந்த பாம்பு (bomb)  இருக்குமோ என்ற நிலை....
ஒருவர் அப்படித்தான் ஒரு போலிச் சாமியாரிடம் ஏமாந்ததில் தாடியைக் கண்டாலே பிடிக்காது. ஆனால் தமிழ் சினிமா மோகம்.
''
நான் கடவுள்'' திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும் .... தாடியோடு நாயகன் இருந்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்கப் போனார்.
அவருக்குக் கூட்டத்தில் படம் பார்க்கப் பிடிக்காது.
கடைசி வாரம் படம் திரையிலிருந்து விலகுமுன் பார்ப்பது அவர் வழக்கம்.
காலி இடங்களுக்கு நடுவே காலைத்தூக்கிப் போட்டுக்கொண்டு நிம்மதியாய்ப் பார்ப்பார்.
அதில் ஒரு சந்தோஷம்.
’’
நான் கடவுள்’’ திரைப்படம் பார்க்கப்போனபோது அப்படித்தான் காலி வரிசையில் கடைசியில் அமர்ந்தார்....
ஆனால் அவர் மகிழ்ச்சி சில நிமிஷங்களில் மறைந்தது.
ஒரு தாடிக்காரர் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
''
இவ்வளோ இடம் காலி ....என் பக்கத்தில் இடித்துக்கொண்டு ஏன் இப்படி உட்காரணும்?''
இந்த தாடிக்காரனை எப்படியாவது நகர்த்தணும் என்று நினைத்தார்.
தான் வேறு இடத்துக்கு போகலாமே என்று தோன்ற வில்லை.
முதலில் வந்தவனுக்கு உரிமை?
அவர் சொன்னார், பக்கத்தில் இருந்த தாடிக்காரரிடம் :
''
நானும் உங்களை மாதிரி அசிங்கமா தாடி வெச்சிருந்தேங்க.....
ஒரு நாள் கண்ணாடியில் பார்த்ததும் இவ்வளவு அசிங்கமாய் இருக்கே இந்த தாடி ....
அதனால்தான் நம்மளை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டேங்கறாங்க என்று புரிந்தது.
உடனே சலூனுக்குப் போய் தாடியை அடியோடு எடுத்து விட்டேன்.''
அதற்கு பக்கத்தில் இருந்த தாடிக்காரர்:
''
அய்யா, நானும் ஒரு நாள் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது
திடுக்கிட்டேன்,....
உங்களை மாதிரியே அசிங்கமாய் இருந்தது என் முகம்.
அதை மறைக்கத்தான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.'' என்றார்.
''
அப்படியா, அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?''
''
இல்லீங்க...... உங்களுக்கு?''
''
எனக்கும் இன்னும் ஆகலீங்க.''
இந்த common ground  அவர்களுக்குள் ஒரு நட்பை ஏற்படுத்தி விட்டது.
இப்போதெல்லாம் பல படங்களை அவர்கள் சேர்ந்தே பார்கிறார்கள்.
தாடியால் இப்படி ஒரு நட்பு.

Monday, January 31, 2011

டி -ஷர்ட்


டி -ஷர்ட்
[ T SHIRT ]
நகர்புற வாழ்க்கையில் சில ரசிக்கத்தக்க சம்பவங்கள் ……
எங்கள் பக்கத்து வீட்டுப் பையன் ஒரு நாள் '' ஹலோ, அங்கிள் '' என்றான் .... நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகும்போது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும், சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்வதும்  இந்த அடுக்கு மாடி வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சில பரிமாற்றங்கள்.
பிளஸ்-டூ  துருதுருப்பு.
நல்ல சூட்டிகையான பையன்.
நானும் '' ஹலோ friend,  how are you ''  என்றேன் பதிலுக்கு.
கூடவே  '' உன் டி -ஷர்ட் பிரமாதம்'' என்றேன்.
அதில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது:
'' I AM THE PROUD PRODUCT OF 
   MY DEAR FATHER'S BRAIN AND
   MY  LOVING MOTHER'S  BANK BALANCE!''
என்பதுதான் அதன் வாசகம்!
தமிழாக்கம்:
''என்னை உருவாக்கியது
 
என் அருமை அப்பாவின் மூளையும்
 
என் அன்பான அம்மாவின் பண பலமும்.''
நான் சிரித்தேன், கூடவே வியந்தேன். எவ்வளவு நல்ல அஸ்திவாரம்
பரவாயில்லை பையனுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் .அப்போது அவன் சொன்னான்,
''அங்கிள், இந்த டி -ஷர்ட் என்னை ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்து காப்பாற்றியது போன வாரம்.''
''
அப்படி என்னப்பா இக்கட்டு  உனக்கு, இந்த இளம் வயதில்... அதுவும் உன் அருமை அப்பாவும், அன்பான அம்மாவும் உனக்கு துணை இருக்கும் போது என்ன இக்கட்டு வந்தாலும் பறந்து போகாதோ?''
''
போன வாரம் கணக்குப் பரிட்சையில் எனக்கு ஜீரோ மார்க்.
அன்னிக்கு என் டீச்சர் என்னை கூப்பிட்ட போது பயந்துகொண்டே போனேன், என்ன சொல்லி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்.... ' உடம்பு சரியில்லை, அதனால் பரீட்சைக்குச் சரியாகப் படிக்க முடியவில்லை' என்று முதலிலேயே பலதடவை சொல்லியாச்சு.
எடுபடாது.
திடீர் என்று ஒரு மின்னல் மூளையில் ....
'
மிஸ், இதுக்கு நான் காரணமில்லை ... இது தான் காரணம் 'என்று இந்த டி -ஷர்ட் வாசகத்தை காட்டினேன்அன்றைக்கு அதிர்ஷ்ட வசமாக இந்த டி -ஷர்ட் அணிந்திருந்ததால்.
' I AM THE PROUD PRODUCT OF
MY DEAR FATHER'S BRAIN
AND MY LOVING MOTHER'S BANK BALANCE'
என்று கூடவே படித்தேன், சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவர் கேட்டார்,'' என்ன சம்பந்தம் இல்லாமல் ஜோக் அடிக்கிறாய்,டி -ஷர்ட் க்கும் கணக்கில் மார்க் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?' என்று.
நான் சொன்னேன்:
' எங்கப்பா எப்பவும் சொல்வார் ... எங்கம்மாவுடைய பேங்க் பாலன்ஸ், எங்கப்பாவுடைய மூளை  இரண்டும் ஜீரோ ' என்று.
டீச்சர் சிரித்து விட்டார், என்னை கோபிக்க வேண்டும் என்று தோன்றாமல்....
எப்படியோ தப்பித்தேன் அன்றைக்கு.''அவன் சொன்னதைக் கேட்டு எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நானும் பலமாகச் சிரித்தேன். எவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ள குடும்பம்!
''
இல்லாவிட்டால் என்ன பண்ணியிருப்பார்உங்கள் டீச்சர் ?''
''
ரொம்ப ஹோம் வொர்க்  கொடுத்திருப்பார் ''
''
அதனால் என்ன, செய்ய வேண்டியது தானே?''
''
மறுபடி ஜீரோ வாங்கினால், மறுபடி இதே T-SHIRT உதவாது வேறே ஏதாவது வழி பார்க்கணும்'' என்றான் என் பக்கத்து வீட்டு ஜீனியஸ்.
உண்மையாகவே ஜீனியஸ் தான் .... இது போல் தப்பிக்க ரொம்ப மூளை வேண்டும்.

ஒரு கழுதை கொடுத்த உதை


ஒரு கழுதை கொடுத்த உதை
லிபியா
1995
எண்ணை சுத்தீகரிப்பு  ஆலை
எனக்கு பொறியியல் வேலை
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பண்ணை (farm).வாரம் ஒருமுறை அங்கே போய் பால் வாங்கி வருவது என் வாடிக்கை.
அந்தப் பண்ணையின் உரிமையாளர் இப்ரஹீம்.
நல்ல தடிமனான வஞ்சனை இல்லாத உடல்.
சிரித்தால் வாய் முழுவதும் தங்கம் ஜொலிக்கும் பல் வரிசை.
உள்ளே நுழைந்ததும் ஓடிவந்து வரவேற்கும் கடைக்குட்டிப் பெண்.
புஸு புஸு என்று கிள்ளத் தோன்றும் கன்னங்கள்.
ஐந்து அல்லது ஆறு வயதுதான்.
ஓடி வந்து என்னிடமிருந்து பால் நிரப்பும் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேனை பிடுங்கிக்கொண்டு என் கையிலிருந்து ஒரு சாக்லேட் துண்டையும் ஆவலுடன் பறித்துக்கொண்டு துள்ளி ஓடும் ஒய்யாரம் அந்த குழந்தைக்கே உரிய, என்னைக் கவர்ந்த வரப்ரசாதம்.
நான் காரைத் திருப்பிப் பார்க் செய்து விட்டு இறங்கிப் போவதற்குள் இப்ரஹீமின்  மற்றக் குழந்தைகள் என்னை மொய்த்துக்கொள்ளும்.
வரிசையாக ஒண்ணரை ஒண்ணரை வயது வித்தியாசத்தில் ஒரே அச்சில் வார்த்துச் சிரிக்கும் பொம்மைகள்.
ஒரு சாக்லேட்  போதும் அவை மலர.
இப்ரஹீம் பண்ணை நடுவிலிருந்து குரல் கொடுக்க நான் அவரை நோக்கி  நடக்க ஆரம்பித்தேன்.
அவரிடம் போய் கை குலுக்கி சம்பிரதாய வினவல்களை அராபிய மொழியில் எனக்குத் தெரிந்த அளவில் பரிமாறிக்கொண்டபின் அங்கே கட்டி இருந்த அவருடைய கழுதை என்னைப் பார்த்து அன்புடன் கனைத்ததில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது....ஏதோ அருமை நண்பனை பார்த்த மாதிரி.
இப்ரஹீம் சொன்னார்:
''
இந்தக் கழுதை என் பிரியமான பிராணி.
என் மனைவியை விட என் கழுதை சில விஷயங்களில் மேன்மையானது''எனக்கு ரொம்ப வியப்பாகி விட்டது. இப்படியும் ஒரு மனிதனா?அதுவும் வீட்டில் மனைவி இருக்கும்போதே இப்படி உரத்தகுரலில் சொல்ல என்ன தைரியம்?
''
என்ன இப்ரஹீம் ... ஏன் இப்படி சொல்கிறாய்... உன் மனைவி ரொம்ப நல்ல மாதிரியாச்சே.''
''
அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடப்பது வேறு.
நான் காலை ஐந்து மணியிலிருந்து பண்ணை வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்....
பாருங்கள், நான் ஒரு நிமிடம் ஓய்வாக நின்றால் உடனே குரல் கொடுப்பாள் அடுத்த வேலை தர.
என் கழுதை அப்படி இல்லை.
நான் கட்டிய இடத்தில் அமைதியாக மேய்ந்து கொண்டு இருக்கும். நான் முதுகில் ஏற்றும் சுமையை சலிக்காது என்னுடன்  எடுத்து வரும்.
எனக்கு என் கழுதை தொந்திரவே தந்ததில்லை.
எவ்வளவு நல்ல பிராணி இது.
கடவுள் இந்தக் கழுதையை ரட்சிக்கட்டும்.''என்று கூற , நான் அந்த அதிசயக் கழுதையை நெருங்கிப் பார்க்க அடி எடுத்து வைத்தேன்.
உடனே அந்தக் கழுதை தன் உடலைத் திருப்பி அதன் பின்னங்கால்கள் என் பக்கம் வரும்படி நின்றது.
சரி நாம் வேறு பக்கம் பார்க்கலாம் என்று நான் அடியெடுத்து வைக்க அந்தக் கழுதையும் மறுபடி அதன் பின்கால்கள் என்னை வரவேற்கும் நிலையில் திரும்பி நின்றது.
நான் புரிந்து கொண்டேன்.
கழுதைகள் கூட புத்திசாலிகள் தான்.
மனிதனை நெருங்க விடாமல் உதைக்க அவற்றுக்கு இயற்கை கற்றுக்கொடுத்திருக்கிறது.
ரொம்பவும் நெருங்க முற்பட்டால் நம் முன்பற்களை இழக்க நேரிடும்.
இந்த defence mechanism ( தற்காப்புத் திறன் ) எல்லாக் கழுதைகளுக்கும் உண்டு.
அவைகளுக்கு தெரியும்....இந்த மனிதப் பிராணிகளை மதித்துப் பக்கத்தில் வர விட்டால் நம் மேல் ஏறி உட்கார்ந்து நம்மையே அதிகாரம் செய்வார்கள் என்று.
அந்தக் கழுதையின் உரிமையை மதித்து நான் சிறிது நகர்ந்தேன்.
கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தபோது ஒரு வேடிக்கையான விஷயம் தென்பட்டது . அந்தக் கழுதை கட்டியிருந்த கயிறு சுமார் இருபது  அல்லது  இருபத்து ஐந்து அடி நீளம் இருக்கும்.பக்கத்துப் பண்ணைக்குப் பரவாமல் மேயும் அளவுக்குக் கொடுக்கப் பட்ட நீளம்.
நாள் பூரா மேய்ந்தாலும் போதுமான புல்லும் செடிகளும் வளர்ந்திருந்த செழிப்பான பூமி .
அந்தக் கழுதைக்கு குறைபட ஏதுமில்லை.
ஆனால் நான் பார்த்த ஒரு விஷயம் என் மனதில் கேள்விக்குறியாய் தொடர்ந்தது.
அந்தக் கழுதை, கட்டியிருந்த கம்பத்தின் அருகாமையிலேயே மேய்ந்து கொண்டிருந்தது.
கொஞ்சம் பெரிய வட்டத்தில் நிறைய பசுமை  இருந்தும் சிறிய வட்டத்திலேயே அடங்கி இருந்தது....
ஏன் என்று பார்த்தால் அது கயிற்றை ஒரே முகமாகச் சுற்றிச்  சுற்றி அந்தக் கயிற்றின் நீளம் முழுவதும் அந்தக் கம்பத்தில் ஏறி, மிகக் குறுகிய அளவே எஞ்சி இருந்தது.
அந்தக் கழுதை கொஞ்சம் நிதானித்துப் பார்த்திருந்தால் அந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு நல்ல பசுமையான புல்லை மேய வாய்ப்புக்  கிடைத்திருக்கும்.
ஆனால் குறுகிய வட்டத்திலேயே ஒரே பக்கமாக சுற்றி வந்து தன்னை வளைத்துப் போட்டுக்கொண்ட அறியாமையை உணரவில்லை.
உணர்ந்தால் அது மிக எளிதாய் மற்ற பக்கத்துக்கு திரும்பிச் சுற்றி வந்து தன்னை இந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் அந்தக் கழுதைக்குத் தெரிய வேண்டும் என்று நான் நினைப்பதே ஒரு மடமை தான்.
அதற்கு அதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை.
மனிதனைப் போல நினைக்க வேண்டிய மன உளைச்சலும் அதற்கில்லை.
திடீர் என்று எனக்கு ஒரு உதை!
உடலில் இல்லை
மனதில்.
'
நானும் அந்தக் கழுதை போல்தானே?' என்ற நினைப்புத்தான் அந்த உதை.
கடந்த கால அனுபவங்களினால் ஏற்படுத்திக்கொண்ட  மனத்தடைகள், என் சுற்றம், என் குடும்பம், என் கலாச்சாரம், என் தொழில் என்று என்னைச் சுற்றி வட்டங்களை நிறுவிக்கொண்டு அந்தக் குறுகிய இடத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் நான் இந்தக் கழுதையை விட என்ன உயர்த்தி?அந்தக் கழுதை அந்தக் கணத்தில் ஒரு நல்ல பாடம் கற்பித்தது.
இதுவரை அதை என்னால் மறக்க முடியவில்லை.
அந்தப் பரிமாணத்திலிருந்து என்னை மீட்க வந்ததுபோல் இப்ரஹீமின்  மனைவி பால் நிரப்பிய குடுவையுடன் வந்தாள்.
நாங்கள் கழுதையுடன் உரையாடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்:
''
இந்த மனிதனின் மடமையைப் பாருங்கள் ...
இந்தக் கழுதை இவருக்கு சோறு போடுமா?என்னை விட இந்தக் கழுதை எப்படி மேலாகும்?நான் தினமும் படைத்த உணவு எவ்வளவு சுவையானது என்று இப்ரஹீமின் உடலே சொல்லும்.''என்று கூறியபடி அவரது தொப்பையைத் தொட்டுக்காட்டி கேலி செய்தாள்.
இதற்கு ஒன்றும் சளைக்கவில்லை இப்ரஹீம்.
''
நீயும் எனக்கு நிகர் தான்'' என்று சிரித்தான்.
அவளுடைய சுற்றளவை இப்ரஹீம் எட்ட பல நாட்கள் ஆகும் என்பது நிதர்சமான உண்மை.
நான் சிரித்துக்கொண்டே பாலுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு காரில் ஏறினேன்.
அந்தக் கழுதை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்னுடன் ஐக்கியமாகி விட்டது.

தர்ம சங்கட நேரங்கள்.


தர்ம சங்கட நேரங்கள்.
என் நண்பன் ஒருவன் ஏதாவது சிரிப்பு வெடி தெளித்துக்கொண்டே இருப்பான்....எதையும் எளிதாக்கி மனச் சுமைகளை ஓட்டி விடும் நுட்பம் கைவந்தவன். 
பெயர்: சாலா ஆஸ்கர் .
இடம் : அசாவியா, லிபியா.
பருத்த உடலுடன் குண்டு முகத்தில் சிரிப்பை அடக்கி அவன் நிதானமாய் ஜோக் அடிக்கும்போது யாராலும் அவன் வலையில் விழாமல் இருக்க முடியாது.
சில விஷயங்களில் அவனுக்கு உடன்பாடில்லை என்றால் அதை நாசுக்காக அவன் சமாளிக்கும் விதமே தனி.
ஒரு  சமயம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு நண்பன் சாலா விடம்
''
சாலா, உன் கார் சாவியைக் கொஞ்சம் கொடு. சில மணியில் திரும்பி வந்துவிடுவேன்.'' என்றான்.
சாலாவுக்கு காரைக் கொடுக்க விருப்பமில்லை என்பது அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
அவன் சொன்னான் :
''
என் அப்பாவைக் கேட்காமல் நான் காரை யாரிடமும் தருவதற்கில்லை. மன்னிக்க வேண்டும்.
உனக்கு அவசரமாய் drop செய்ய வேண்டும் என்றால் சொல். இன்னும் சில நிமிஷத்தில் நானே வருகிறேன் drop செய்ய.''அந்த நண்பன் '' பரவாயில்லை, வேண்டாம் . நான் வேறே வழி பார்த்துக்கொள்கிறேன் '' என்று நகர்ந்தான்.
சாலா வின் இந்த லாவகமான பதில் என்னைக் கவர்ந்தது.
''
சாலா, காரைக் கொடுக்க முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல் அதை நீ சமாளித்த விதம் எனக்குப் பிடித்தது.
அதுவும் உன் தந்தை மேல் உனக்கு அவ்வளவு மரியாதை இருப்பது பெரிய விஷயம். அவர் சொல்லை அவ்வளவு நெறியோடு கடைப்பிடிக்கிறாயே?''சாலா: '' அப்படியே பழகிவிட்டது.''நான்: '' உன் அப்பா எங்கே வேலை செய்கிறார்? என்ன தொழில்?''சாலா: '' அவர் இப்போது வேலை எதுவும் செய்ய  வில்லை.''பெரும்பாலும் யாருடைய சொந்த விஷயங்களையும் கேட்காமல் இருப்பது என் கொள்கை.
எல்லோருக்கும்  அவரவர் அந்தரங்கம் சொந்த விஷயம். அதில் தலையிடக்கூடாது என்பது நானே எனக்கு விதித்துக்கொண்ட ஒரு கோட்பாடு.
என்னுடைய அந்த விதி முறையை நானே மீருவதுபோல், அதன் விளைவுகளை நினைக்காது அடுத்தக் கேள்வியைக் கேட்டேன்.சில சமயங்களில் மனதைத் தொடும் நெகிழ்வில் நாம் நம்மை மீறி செயல் படுகிறோம். நானும் அதற்கு விலக்கல்ல.
நான்: '' உன் தந்தை retire ஆகி விட்டாரா?''சாலா: '' அவர் ஓய்வு பெற்று பல வருஷங்கள் ஆகி விட்டது. நன்றாக வாழ்ந்தார். இப்போது 'அண்டர் கிரௌண்டில்' இருக்கிறார்.
நான்: '' underground  என்றால்?... புரிய வில்லை.... ஏதாவது தலை மறைவான அரசியல் புரட்சி போல? ....மறைந்திருந்து .....''சாலா: '' அதெல்லாம் இல்லை.நான் சிறுவயதாக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்.''

நான் வாயடைத்துப் போனேன்.
மேலே எப்படித் தொடர்வது என்று தயங்கினேன்...
சில சமயம் பேசாமல் இருப்பதே சரி.
சாலாவே நிலைமையை புரிந்து தொடர்ந்தான்...
''
நான் எப்படி என் அப்பாவை கலந்து ஆலோசிப்பேன் என்று நீ நினைப்பது புரிகிறது.
என் தந்தை எப்போதும் என் மனதில் இடம் பெற்றவர். ஏதாவது கேட்க வேண்டுமானால் நான் என் மனதுக்குள் நிறுத்தி, அப்படியே விட்டு விடுவேன்.அவருடைய பதில்  உரிய நேரத்தில் கிடைத்து விடும்.''நான்: '' அது எப்படி உனக்குத் தெரியவரும்? பதில் வந்தது என்று என்று எப்படி புரியும்?''சாலா: ''பழக்கத்தினால் அது புரியும்.சிறு வயதிலிருந்தே அது எனக்கு பழக்கமாகிவிட்டது.''
இன்னமும் எனக்கு அவனுடைய உத்தி மிக சாமர்த்தியமானதாகப் பட்டது.
நட்பை இழக்காமல் சங்கடமான சமயத்தில் சமயோசிதமாய் பதிலளிப்பது சாமர்த்தியம் தானே.
கடவுள் நம் எல்லோருக்கும் அந்த சாமர்த்தியத்தைக் கொடுத்திருந்தும் அதை உபயோகிக்கத் தெரிந்திருக்கவும் சாமர்த்தியம் தேவையாயிருக்கிறது.