Sunday, October 18, 2009

மடமையிலே இனிமை காண முடியுமா
























’’நாம் எல்லோரும் தினசரி கொஞ்சம் நேரத்துக்காவது மூளையில்லாமல் செயல்படுகிறோம்’’ என்று ஒரு ஆராய்ச்சிக் கணிப்பு தெரிவிக்கிறது.

எதைத் தான் ஆராய்ச்சி செய்வது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது ... நல்ல விஷயங்கள் பல இருக்கும்போது அதை எல்லாம் விட்டுவிட்டு .... மூளை இல்லாத ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடைக்கிறது  என்று சிலர்கேட்கலாம்.

ஆனால் இந்த விவஸ்தை இல்லாத ஆராய்ச்சியிலும் ஓரளவு உண்மை இருப்பது மறுக்க முடியாதது.
நாம் உணராமலே நம் செயல்களில் இந்த மடத்தனம் அல்லது மூளை இல்லாத் தன்மைதானே வந்து நுழைவது காலம் காலமாய் புதுப் புது வழிகளில் சஞ்சரிக்கிறது.
இரவு படுக்குமுன் அன்றைய தினம் நடந்தவற்றை நினைவு கூர்ந்தோமானால் இது எவ்வளவு தூரம் நம்மை ஆக்ரமித்துள்ளது என்று தெரியவரும்
introspection என்ற சுயபரிசீலனை ரொம்ப உபயோகமான உத்தி.

இன்று காலை எனக்கு இதன் ஒரு பரிமாணம் தெரியவந்தது.
வாக்கிங் போகக் கிளம்பி கொஞ்சம் தூரம் நடந்த பின் நடை பாதை அடைத்திருந்ததால் தெருவில் இறங்கி நடக்க வேண்டி வந்தது .
இந்தத் தெருவில் வந்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே நடக்கையில் என் பின்னே வந்த ஆட்டோ ஓட்டுனர் என்னைக் கூவி அழைத்து ‘’அறிவிருக்காய்யா .... வண்டி முன்னால் நடக்கறியே’’ என்று கூற நான் ‘’ஏம்பா நடக்கிற பிளாட்பாரம்  பூரா கையேந்திபவன் , மின்சார ஜங்க்ஷன் பெட்டி, பழக்கடை, அகில இந்திய  ஆட்டோ ஓட்டுனர் சங்கம் என்று  இப்படி மடக்கிப் போட்டால் நடுத்தெருவில் நடக்காமல் எங்கே நடக்கிறது? அதனால் அறிவில்லை என்று அர்த்தமா? ‘’
’’உன் பின்னாலேயே ஆட்டோ ஓட்டினா நான் எப்போ போய் சேர்றது?’’
அவர் கஷ்டம் எனக்குப் புரிந்தாலும் என்னை அறிவிருக்கா என்று கேட்டதில் ஒரு கொதிப்பு .

நம்மை நாமே முட்டாள் என்று சொல்லிக்கொள்வதில் நமக்கு ஓரளவு பழக்கம் வந்து விட்டது. ஆனால் வேறு யாராவது அப்படிச் சொன்னால் அது நம்மை பாதித்து சூடாக்கி விடுகிறதே ஏன்?
இருந்தும் ஓரளவு சுயக் கட்டுப்பாடுடன் மேலே பேசாமல் கொஞ்சம் ஒதுங்கி, சென்னை மாநகராட்சி தெருவோடு தோண்டிக் கொட்டியிருந்த மேட்டுக்கும், அங்கே  ‘தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று ஒருவருஷம் பத்து மாதமாய் வருந்திக்கொண்டிருந்த பலகைக்கும் நடுவில் நர்த்தன விநாயகர் கோலத்தில் நின்று வழிவிட்டேன்....
சென்னை தெருக்களில் நடக்கப் பழகிவிட்டால் நாட்டியப் பள்ளிகளுக்குப் போக வேண்டாம் .. தானே நாட்டியம் வந்துவிடும்.

அந்த ஆட்டோ  என்னைக் கடந்ததும் மறுபடி நடையைத் தொடர்ந்தேன்
கொஞ்சம் தூரம் நடந்தும் கட்டுக் கட்டாய் கீரை வந்து இறங்குவதைக் கண்டேன்.  இவ்வளவு freshஆய்  பார்த்ததும் அதை விட மனமில்லாமல் இரண்டு கட்டு வாங்கிக்கொண்டு கூடவே கொஞ்சம் மற்ற கறிகாய் களையும் சேர்த்ததில் இரண்டு கைகளிலும் பையோடு இனி வாக்கிங் தொடர முடியாத நிலையில் என் மடமையை உணர்ந்தேன் .... இதென்ன வாக்கிங் வந்து விட்டு இப்படி கீரையைப் பார்த்ததும் நடை தளர்ந்து விட்டேனே ....

இதாவது பரவாயில்லை ... நம் ஆரோக்யத்திற்காக கொஞ்சம் கீரை வாங்குவது தவறில்லை ... ஆனால் இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் கறிகாய்களை சுமந்துகொண்டு வாக்கிங் எப்படி தொடர முடியும்?
வாக்கிங் வந்தால் வாக்கிங் மட்டும் தான் செய்ய வேண்டும் ... கறிகாய் வாங்க வேறு நேரம் ஒதுக்க வேண்டும் என்று என் மட மூளைக்கு அப்போது தான்உறைத்தது.

என்னை ஏசிய ஆட்டோவைத் தவிர வேறு ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்று தேடலுடன் அங்கும் இங்கும் கண்ணோட்டம் விட்டதில் ஒரு மஞ்சள் தேவதை கறுப்புக் கிரீடத்துடன் வருவது தெரிந்தது.
என்னைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தது உரசி நின்றது.
’’என்னா சார்,   எங்கே போவணும்?’’
’’மயிலாப்பூர் போகணும் ‘’
’’சரி குந்து’’
’’எவ்வளவு’’
’’இன்னா சார், உனக்கு தெரியாததா ... பாத்துக் குடு ... ஏறு’’
’’மொதல்லே எவ்வளோன்னு சொல்லு’’
’’எண்பது ரூவா குடு ‘’
’’இது என்னப்பா அநியாயமா இருக்கே ... ஒண்ணரை கிலோ மீட்டருக்கு  எண்பது ரூபாயாமுப்பது ரூபா தான் தருவேன் ... மீட்டரில் இருபது ரூபா தான் வரும் ‘’
’’காலங்காத்தால போணி ...சரியான சாவு கிராக்கி ...
வேறே ஆளைப் பாரு ‘’
என்று எனக்குப் புகழாரம் சூட்டியபோது தான் தெரிந்தது அது மஞ்சள் தேவதை இல்லை கறுப்புப் பிசாசு என்று....
பத்மஸ்ரீ விருதுக்கு சமமான இந்த விருதினால் கொஞ்சம் பெருமிதத்துடன் கேட்டேன்
’’ஏம்பா சாவு கிராக்கின்னா என்ன ?’’
’’கிருஷ்ணாம் பேட்டை போக வேண்டிய கிராக்கிக்கு சாவு கிராக்கின்னு  சொல்வாங்க’’ 
ரொம்ப வினயத்துடன் எடுத்துரைத்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.
’’அது சரி கிருஷ்ணாம் பேட்டைக்குப்  போறவன் உனக்கு எப்படி துட்டு கொடுக்க முடியும்?’’
’’அதாங்க அதுக்கு  அர்த்தம் .... நீ குடுக்கற துட்டும் ஒண்ணுத்துக்கும் ஆவாது ... இன்னாத்துக்கு வீணா சௌண்டு வுடறே ... போய்க்கினே இரு’’ என்று கூறிச் சென்றார் அந்த நல்லிணக்க ஆட்டோ ஓட்டுனர்.

அவர் கொடுத்த பட்டத்துடன் என் கைப்பைகளின் துணையோடு  இன்னும் கொஞ்சம் தூரம் நடந்ததும் என் கலி தீர்க்க வந்தது பல்லவன் பேருந்து நிலையம்.
மூன்று பேருந்துகள் சேர்ந்து வந்ததில் மக்கள் அலைமோதியத் தள்ளலில் எந்த உந்தில் ஏறுவது என்று யோசிக்கக் கூட இடமில்லாமல் கூட்டத்தோடு  உந்தப்பட்டு ஏறி அமர்ந்தேன்.
நடத்துனர் வந்ததும் ‘’மைலாப்பூர்’’ என்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
பைகளை இறக்கி வைத்த சுகத்தை அனுபவிக்க விடாது கேட்டார் அந்த நடத்துனர் :
‘’என்னய்யா ... காலங்கார்த்தால நூறு ரூவா கொடுக்கறியே  அறிவு வேணாம்? ... சில்லறை குடு ‘’  என்றார்
அவர் தலைக்கு மேல் திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
என்று கோணலாய் மாட்டி இருந்த பலகையில் ஆணித்தரமாய் சொன்னார் ...
நடத்துனருக்கு இல்லை .... எனக்குத்தான்.
’’ஐயா சில்லறை இல்லை எல்லாம் தீர்ந்துவிட்டது
கொஞ்சம் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’’
என்றதும் கொஞ்சம் தணிந்து விரலிடுக்கில் என் நூறு ரூபாய் நோட்டை நாலாய் மடித்துச் செருகிக்கொண்டு நகர்ந்தார்.

மயிலாப்பூர் வந்து இறங்கும் வரை நடத்துனர் கண்ணில் படவில்லை.
தேடிப்பிடித்து பாக்கி கேட்க பயமாய் இருந்தது.
பொறுமையும் இல்லை.
என் மூளையின்மையை மறுபடி நொந்து கொண்டே இறங்கி நடந்தேன் ..
ஆட்டோக்காரன் கேட்ட எண்பது ரூபாய் கொடுத்திருந்தால் இருபது ரூபாய் மிச்சமாகி இருக்குமே ...அதுவும் நேராய் வீட்டு வாசலில் வந்து இறங்கி இருக்கலாம் ...
இன்று நாள் சரியில்லை
வீட்டுக்குப் போய் தினக்காலண்டரில் பார்த்தேன்
சரியாய்ப் போட்டிருந்தது
கீழ்நோக்கு நாள் என்று
மேலும் என் ராசிக்கு பலன் ...ஏச்சு என்று போட்டிருந்தது!
ஒரே வார்த்தையில் தலையில் அடித்தாற்போல எவ்வளவு கச்சிதம்
ஜோசியர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஏதாவது உள்வர்த்தகம் [ insider trading ] இருக்குமோ?


இனி எப்போது வாக்கிங்  போவதானாலும் அன்று நாள் எப்படி என்று பார்த்து அதன்படி நடக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

No comments:

Post a Comment